இடுகைகள்

உலகும் வாழ்வும்

இரவில் பகல் உறங்குகின்றது பகலில் இரவு உறங்குகின்றது  நனவுகள் தூக்கத்தில் மறைகின்றன கனவுகள் விழிப்பில் மறைகின்றன  உலகும் வாழ்வும் உருள்வது இப்படித் தான்!                                          -இலக்கியன்

இயற்கை

குயில்கள் எல்லாம் காக்கைகளின் பிள்ளைகள்! காக்கைகள் எல்லாம் குயில்களின் பெற்றோர்! எண்ணாதவர்க்குப் புரியாது இயற்கை எண்ணிப் பார்த்தால் இனிதாகும் வாழ்க்கை!                                   =இலக்கியன்

காதலின் தன்மை

  காதலின் தன்மை ஆதலின் தன்மையோ? சாதலின் தன்மையோ?? கன்னியின் தன்மை கண்ணியின் தன்மையோ? உண்ணியின் தன்மையோ?? ஆடவர் தன்மை மூடர் தன்மையோ? வேடர் தன்மையோ?? காதலின் தொடக்கம் ஆதலின் தொடக்கமோ? சாதலின் தொடக்கமோ?? அறிவீரோ? அறிந்தவர் உரைப்பீரோ?                          - இலக்கியன் 

ஐந்தறிவு ஆறறிவு

  ஆறறிவு மனிதர் சொல்வதை ஐந்தறிவு நாய் புரிந்து கொள்கின்றது! ஐந்தறிவு நாய் சொல்வதை ஆறறிவு மனிதர் புரிந்துகொள்வதில்லை! ஆறறிவு யாருக்கு? ஐந்தறிவு யாருக்கு? ஆராய வேண்டியுள்ளது!                                           - இலக்கியன் 

தை

  எந்தையின் வழி வந்தது சிந்தையின் உள் நின்றது எம் தை.

மௌனம் வலியது

  அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனிடம் செல்லுபடி ஆகாது! தரமற்றதிடம் பேசி... தரம் தாழ்ந்திட வேண்டாம்! மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் வலியது! சொல்லை விட -எய்தும் வில்லை விட மௌனம் வலியது! மௌன வேலி அமைத்துக் கொள்க!                                          -இலக்கியன் 

கனவின் எடை

  ஓராயிரம் கனவுகளின் எடையை விட ஒரு கவலையின் எடை மிக அதிகம் ஓராயிரம் கவலைகளின் மதிப்பை விட ஒரு கனவின் மதிப்பு மிக அதிகம் கவலைகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்வது இல்லை கனவுகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்ந்து விடும் அருமை இதயமே அதனால் சுமக்காமல் கவலையைத் தவிர்க்கவும் சுமப்பதென்றால் கனவைச் சுமக்கவும்.                             -இலக்கியன்